We Give Everything First

Tuesday, July 14, 2020

தினகரன் தலையங்கம்(14.07.2020) - கொரோனா பிடியில் கிராமம்




✔கொரோனா வைரஸ் மிக சாதுர்யமான முறையில் பரவலை அதிகரித்து வருகிறது. கொரோனா விஷயத்தில் முன்கூட்டியே  யோசித்து ‘ஸ்கெட்ச்’ போடாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதற்கு தமிழகம் மிகச்சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறது. தலைநகர் சென்னையில் கொரோனாவின் ஆட்டம் துவங்கி, இரண்டாம் கட்ட நகரம் வரை கட்டுக்குள் அடங்காமல் பரவி வருகிறது. 


முன்னெச்சரிக்கை மற்றும் மருத்துவ கட்டமைப்பு, கண்காணிப்பில் அலட்சியம் ஆகியவற்றின் விளைவாக தற்போது கொரோனா பிடியில் கிராமங்கள் சிக்கி தவித்து வருகின்றன. நகரங்களில் நாளுக்கு நாள் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிக்க போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும் ஒரு
காரணம். கிராமங்களில் சுகாதார வசதிகள் இல்லாத நிலையில், தொற்று அதிகரிப்பதால் நிலைமை படுமோசமாகும் வாய்ப்புகள் உள்ளன.


முக்கியமாக, நகரங்களில் அனைவரும் மாஸ்க் அணியாத நிலை தொடர்கிறது. கிராமங்களில் சொல்ல வேண்டியதே இல்லை. பிற பகுதிகளில் இருந்து சொந்த ஊரான கிராமத்திற்கு ஏராளமானோர் வந்துள்ளனர். கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், அவர் மூலம் அக்கிராமமே பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளது. ஏனென்றால் கிராமங்களில் திருமணம், கோயில்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. 


கொரோனா வைரஸ் முற்றிய நிலையில், வேறு வழியின்றி மருத்துவமனைக்கு வரும் நிலை உள்ளது. எனவே கிராமங்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை உடனே செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. இவ்விஷயத்தில் அரசு அலட்சியத்துடன் செயல்பட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கொரோனா நோயாளிகளை தங்க வைப்பதற்கு கிராமங்களில் வசதிகள் இல்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.


கிராமங்களில் கொரோனா நோயாளிகள் அதிகரிக்க துவங்கினால் ‘பெயரளவுக்கு’ உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தாங்காது. சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாத நிலையில் தொற்று அதிகரிப்பது நல்லதல்ல. கிராமப்பகுதிகளில் தற்காலிக கொரோனா சிறப்பு மருத்துவமனையை ஏற்படுத்தலாம். நடமாடும் வாகனம் மூலம் தினமும் காய்ச்சல் பரிசோதனை செய்யலாம். 

சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அங்கிருந்து இரண்டாம் கட்ட நகரங்களுக்கு மக்கள் வந்தனர். இதனால் இந்நகரங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து கிராமங்களை நோக்கி மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.


தற்போது கிராமங்களிலும் கொரோனா பரவி வருகிறது. இனி எங்கே செல்வது என தெரியாமல் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். கொரோனா வைரஸ் விஷயத்தில் அரசின் நடவடிக்கை படுவேகமாக இருந்திருந்தால், மக்கள் சொந்த ஊர் சென்றிருக்க வாய்ப்பில்லை. கொரோனாவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுக்குள் வந்திருக்கும். 


இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது. ஊரடங்கு தளர்வு கொரோனா பரவலுக்கு மேலும் வழிவகை செய்து விடாமல், இனியாவது கொரோனாவுக்கு கடிவாளம் போடும் வகையில் அரசு கச்சிதமாக செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment